Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் :

வாலாஜா அடுத்த கோடியூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வாலாஜாப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உட்பட்ட கோடியூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைகோடியில் இந்த கிராமம் உள்ளதால் அடிப்படை வசதிகளுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்காமல் காலம் கடத்தி வருவதுடன், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாரை ஊராட்சி செயலாளர் விற்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 10 நாட்களாக முறையான குடிநீர் வழங்காததால் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பொன்னை-ராணிப்பேட்டை சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த வாலாஜாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x