Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM
கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில், அங்கு பணியாற்றிய மேலும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் இருவரும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ்பானு தம்பதியர், அந்த நிதி நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன பொது மேலாளர் காந்த்(56) என்பவரை கடந்த 21-ம் தேதி கைது செய்தனர். மேலும், நிதி நிறுவன அதிபர்களான எம்.ஆர்.கணேஷ் சகோதரர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கணக்காளர்களாக பணியாற்றிய கும்பகோணம் டபீர் கீழத் தெருவைச் சேர்ந்த மீரா(30), அவரது தம்பி தர்(29) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வெளியூருக்குச் செல்ல முயன்றபோது, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பால்பண்ணையில் ஆய்வு
இதற்கிடையே, கும்பகோணம் கீழகொற்கை, மருதாநல்லூரில் உள்ள எம்.ஆர்.கணேஷூக்கு சொந்தமான 3 பால் பண்ணைகளில் உள்ள மாடுகளுக்கு போதிய தீவனம் இல்லாமல் பசியில் இருப்பதால், அவற்றை அருகில் உள்ள கோசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு செல்போன் வாயிலாக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கும்பகோணம் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் கால்நடை மருத்துவர்கள், வருவாய்த் துறையினர் நேற்று 3 பால் பண்ணைகளுக்கும் சென்று, அங்குள்ள மாடுகளின் உடல்நலம், தீவனங்களின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், ஆடுதுறை அருகே கோவிந்தபுரத்தில் உள்ள கோசாலை மாடுகளை பராமரிப்பது தொடர்பாக, திருவிடைமருதூர் வட்டாட்சியர் ஆய்வு செய்து, ஆட்சியருக்கு தகவல் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT