Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா : மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 5,950 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 82, காரைக்காலில் 8, ஏனாமில் 2, மாஹேவில் 12 என மொத்தம் 104 (1.75 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண், காரைக்காலைச் சேர்ந்த 40 வயது ஆண் நபர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 170 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 752 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 620 (97.75 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 14 லட்சத்து 67 ஆயிரத்து 306 கரோனாபரிசோதனைகள் செய்யப்பட் டுள்ளது.

இதில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 418 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 356 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x