Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM
மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் இந்த மழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, கொங்கன் பிராந்தியத்தில் உள்ளபல்ஹார், தாணே, ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் உள்ளன. அங்குள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், கோலாப்பூர் மாவட்டத்தில் பாயும் பஞ்ச்கங்கா நதியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் அங்குள்ள 821 கிராமங்கள் கடுமையான சேதத்தை சந்தித் திருக்கின்றன. 54-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தசுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை புணே நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா வில் மூன்று நாட்களுக்கும் மேல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களுக்கு இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர். கடலோர மாவட்டமான ராய்காட்டில் உள்ள தெலிகிராமத்தில் தொடர் மழை காரணமாக கடந்த வியாழக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
பலர் காணவில்லை
இதில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி அங்கு இரவு - பகலாக நடைபெற்று வருகிறது.இதேபோல, மேற்கு மகராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அம்பேகர், மீர்கான் கிரா மங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சகதியில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த இருவேறு நிலச்சரிவு சம்பவங்களில் இதுவரை 27 பேர் உயிரிழந்திருத்திருப்பதாக பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ள னர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டிடம் இடிந்தது
இதனிடையே, மும்பையின் கோவண்டி, சிவாஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கனமழை காரணமாக அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு மகாராஷ்டிரா முழு வதும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 138 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT