Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

காவல் துறைக்கு எதிரான வழக்குகளில் - குற்றவியல் நடுவர்கள் இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது : ஆவணங்களை ஆராய்ந்து உரிய உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

காவல் துறைக்கு எதிரான வழக்குகளில் குற்றவியல் நடுவர்கள் இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், அதிகவட்டிக்கு பணம் கடனாக கொடுத்து,தனது சொத்தை அபகரித்துக்கொண்டதாகக் கூறி, ஆர்த்தி என்பவர் திருவண்ணாமலை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர், குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முடித்து வைப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விசாரணை நடத்திய போலீஸார், வழக்கை முடித்துவைத்து, மனுதாரருக்கு அறிக்கை அனுப்பினர்.

இதையடுத்து, வழக்கறிஞருக்கு எதிரான தனது புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்த்தி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே அச்சிடப்பட்டு தயாராக இருந்த உத்தரவு நகலில் காலியாக விடப்பட்ட பகுதியை மட்டும்திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் கையால் பூர்த்தி செய்து,உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக திருவண்ணாமலை தலைமைக் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `பணி அழுத்தம் காரணமாக அந்த குற்றவியல் நடுவர் இதுபோல உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும், வேறு உள்நோக்கம் இல்லை' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோல அச்சிடப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என்று திருவண்ணாமலை முதலாவது குற்றவியல் நடுவருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காவல் துறைக்கு எதிரான வழக்குகளில், ஆவணங்களை ஆராய்ந்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.நிர்மல்குமார், இனிவரும் நாட்களில் குற்றவியல் நடுவர்கள் இயந்திரத்தனமாக செயல்படக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும், இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகாரை போலீஸார் முறையாகப் பரிசீலித்து, உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x