Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 5 வயது சிறுமி இசக்கியம்மாள். இவர் கடந்த மார்ச் மாதம் தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் உணவுக் குழாய் பாதிப்பு, உடல் எடை இழப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். அங்கு உள்ள அரசு மருத்துவர்களின் பரிந்துரைப்படி, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று வந்த சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், சிகிச்சை பெறும் சிறுமியிடம் நலம் விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சிறுமி 14 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார். தவறுதலாக பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட பிறகு, திடீரென உடல் மெலிந்து 6 கிலோவாக குறைந்தது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். திரவ உணவு கொடுப்பதற்காக சிறுமியின் வயிற்றில் சிறு துளைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சிறுமிக்கு உணவு கொடுக்கப்படுகிறது.
அவர் இன்னும் ஒரு மாதத்துக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டி உள்ளது.
சிறுமியின் தாயும், தந்தையும் தங்க எனக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். சிறுமிக்கு சிகிச்சை முடியும் வரை அவர்கள் எனக்கு வழங்கப்பட்ட வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT