Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

மன்னார்குடி புதிய மாவட்டம் தீர்மானத்தை ஆக.15 கிராம சபையில் நிறைவேற்ற திட்டம் :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவை அனைத்து சேவை சங்கத்தினர் நேற்று சந்தித்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வட்ட அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டம் மதுக்கூர், வடசேரியை மையமாகக் கொண்ட புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும். மன்னார்குடி புதிய மாவட்டத்தை அறிவிக்கும்போது, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், நீடாமங்கலம், மதுக்கூர், வடசேரி வட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர், ஆக.15-ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின கிராம சபைக் கூட்டங்களில் மன்னார்குடி புதிய மாவட்டம் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற அனைத்து கிராம ஊராட்சி மன்றங்களையும் வலியுறுத்துவது என்ற முடிவையும் அறிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். சேவை சங்கங்களின் சார்பில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், மருந்து வணிகர்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x