Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

கனமழையால் சோலையாறு, அமராவதி அணைகளும் நிரம்பின - பில்லூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் : ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்/பொள்ளாச்சி/உடுமலை

கனமழையால், பில்லூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வால்பாறை சோலையாறு, உடுமலை அமராவதி அணைகளும் நிரம்பியுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் காரமடை அருகே, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் பில்லூர் அணை உள்ளது. கடந்த இரு தினங்களாக நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்வதால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 100 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று அதிகாலை 97.5 அடியை கடந்து நிரம்பியது.

விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால், அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதில் மின் உற்பத்திக்காக மட்டும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக, மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று பில்லூர் அணையை பார்வையிட்டார்.

சோலையாறு அணை

வால்பாறையில் உள்ள மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேல்நீராறு மற்றும் கீழ்நீராறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயரத் தொடங்கியது. நேற்று மதியம் மொத்த உயரமான 160 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததால், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு விநாடிக்கு 867 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6725 கனஅடியாகவும், நீர்வெளியேற்றம் விநாடிக்கு 1692 கன அடியாகவும் இருந்தது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக சின்னாறு, பாம்பாறு, தேனாறு ஆகியவற்றில் மழை நீர் பெருக்கெடுத்து அணைக்கு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணன்(பொ) கூறும்போது, “நேற்று மாலை அணைக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் நீர் வரத்து இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் 87 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 2500 கன அடி உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x