Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

ரூ.1 லட்சம் அபராதத்தை எதிர்த்து - நடிகர் விஜய் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவு :

சென்னை

சொகுசு காருக்கு நுழைவு வரி விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி விதித்த ரூ. 1 லட்சம் அபராதம் மற்றும் விமர்சனத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

நடிகர் விஜய், 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அந்தகாருக்கு ஏற்கெனவே சுங்க வரிசெலுத்தியுள்ள நிலையில், நுழைவுவரி செலுத்த தடை விதிக்கக்கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய் அந்தக் காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் யார் முறையாக வரி செலுத்துகிறார்களோ, அவர்களே உண்மையான ஹீரோக்கள் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி ஏற்கெனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால்நானும் நுழைவு வரி செலுத்த விலக்கு கோரி வழக்கு தொடர்ந்தேன். எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் என்னைப் பற்றி தனி நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தேவையற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக்கோரி, நடிகர் விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதாஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது விஜய்தரப்பி்ல் வழக்கறிஞர் எஸ்.குமரேசன் ஆஜராகி, “தனி நீதிபதியின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. ஆன்லைன் தீர்ப்பின் நகலை அடிப்படையாக வைத்து இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டஅபராதம் மற்றும் தேவையற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும்” என்று கோரினார். அதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவைவிசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x