Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

மாநிலங்களவையில் பெகாசஸ் மென்பொருள் உளவு குறித்து விவாதம் - அமைச்சரின் அறிக்கையை கிழித்த திரிணமூல் எம்.பி. :

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க முற்பட்ட போது, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் இருந்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ்எம்.பி. சாந்தனு சென் பறித்து கிழித்து எறிந்ததால் மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நேற்று காலை அவை கூடியது. அவை அலுவல்கள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க கோரி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட வெங்கய்ய நாயுடு, "முதலில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம்; பின்னர் இந்த விவகாரம் குறித்து பேசலாம்" எனக் கூறினார்.

இதனை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மைய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அவையில் தொடர்ந்து கூச்சல் - குழப்பம் நிலவியதால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில்அவை கூடிய போதும், இதே விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், திரிணமூல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஓர் அறிக்கையை வாசிக்க தொடங்கினார். இந்நிலையில், அவையின் மையப் பகுதியில் இருந்து திடீரென வந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், அமைச்சரிடம் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்தார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.

இதனால் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும், பாஜக எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு உருவாகும் சூழல் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, அவைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அமளி தொடர்ந்ததால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவையில்...

மக்களவையிலும் நேற்று எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவுபார்ப்பு விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபடுவதால் அவை அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x