Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM

தமிழ்நாடு கிரிக்கெட் மகளிரணியில் விளையாட கரூர் அரசுக் கல்லூரி மாணவி தேர்வு :

கரூர்: தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாட ஆண்டுதோறும் திறந்த நிலை பிரிவில் வீராங்கனைகள் தெரிவு நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற திறந்தநிலை பிரிவு தெரிவுப் போட்டியில், கரூர் அரசு கலைக் கல்லூரியின் பி.காம்(சிஏ) 3-ம் ஆண்டு மாணவி செல்ஷியா(19) பங்கேற்றார். தமிழகம் முழுவதும் இருந்து 200 பேர் பங்கேற்ற நிலையில், 23 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செல்ஷியா உள்ளிட்ட 20 பேர் தேர்வாகியுள்ளனர். கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த செல்ஷியா கூறியது: சிறுவயது முதலே கிரிக்கெட் மீது மிகுந்த விருப்பம் உண்டு. ஏற்கெனவே, பள்ளியில் படிக்கும்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவுக்கான தேர்வில் பங்கேற்றேன். அப்போது தேர்வாகாத நிலையில், தற்போதைய தெரிவில் பங்கேற்பதற்கு முன் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பேட்டிங் பிரிவை தேர்வு செய்து விளையாடினேன். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாட தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x