Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை எல்ஜிஎஸ் நகரில் வசிப்பவர் எழிலரசன் மகன் அருணாசலம்(20), செங்கம் அடுத்த கண்ணக்குருக்கை கிராமம் இந்திரா நகரில் வசிப்பவர் குபேந்திரன் மகன் சந்தோஷ்குமார்(22). இவர்கள், இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கூட்டுச் சாலையில் பதுங்கிக் கொண்டு, திருவண்ணாமலைக்கு அதிகாலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மீன் உள்ளிட்டவற்றை வாங்க வரும் வியாபாரிகளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தச்சம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இவர்களது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சந்தோஷ்குமார் மற்றும் அருணாசலம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் தச்சம்பட்டு காவல் துறையினர் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT