Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM
ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் திட்டத்துக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்துக்கு பிஏபி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.650 கோடி மதிப்பீட்டில் பரம்பிக்குளம் - ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு திருமூர்த்தி நீர்த்தேக்கம் திட்ட பாசன விவசாயிகள் மற்றும் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிஏபி விவசாயிகள் கூறும்போது, ‘‘பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில் ஏற்கெனவே தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. ஆனைமலையாறு –நல்லாறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் திருமூர்த்தி அணை பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பிஏபி அணைகளிலிருந்து ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு, பரம்பிக்குளம் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருப்பது பிஏபி திட்ட விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவைக்கு மாற்றுத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT