Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

கடந்த மூன்று ஆண்டுகளாக - அமராவதியில் மரக்கன்று வளர்ப்பு திட்டம் நிறுத்தம் : நிதி ஒதுக்கீடு இல்லை என வனத்துறை விளக்கம்

அமராவதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், மரக்கன்று வளர்ப்பு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பலவகையான மரக்கன்றுகள் உற்பத்திசெய்யப்படுவது வழக்கம். நன்குவளர்ந்தபின்பு இவை வனப்பகுதிக்குள் நடவு செய்யப்படும். தன்னார்வலர்களுக்கு இலவசமாகவும், குறைந்தபட்ச விலையிலும் விநியோகிக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே அங்கு மரக்கன்று உற்பத்திநிறுத்தப்பட்டுள்ளதாக வனஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அமராவதி மீன் பண்ணைக்கும், முதலைப் பண்ணைக்கும் இடைப்பட்ட வழியில் மரக்கன்று உற்பத்தி மையம் உள்ளது. அமராவதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் உற்பத்தி செய்துவனப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளுக்கும்மேலாகவே மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட இடமும்பராமரிப்பின்றி பாலைவனம் போல காட்சியளிக்கிறது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளைக்கூட வனப்பகுதிக்குள் நடவு செய்யாததால், தண்ணீர்இல்லாமல் அவையும் காய்ந்து வருகின்றன. இதையறியாமல் பலரும், மரக்கன்றுகளை வாங்குவதற்காக இங்கு வந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே ஆட்சியர் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமராவதி வனத்துறையினர் கூறும்போது, ‘‘மரக்கன்று வளர்ப்பு திட்டத்துக்காக அரசு போதிய நிதி ஒதுக்காததால், திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து துறை ரீதியாக அரசின் கவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x