Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

திருப்பத்தூர் அருகே பெயர் பலகை அகற்றம்போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிராம பெயர் பலகையை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக அகற்றியதால் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சியில், புதுக்கோட்டை, செள்ளூர் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. செள்ளூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், அங்குள்ள சாலையோரத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெயர் பலகையை மர்ம நபர்கள் அங்கிருந்து சில மீட்டர் தொலைவுக்கு தள்ளி பெயர்த்து வைத்திருந்தனர். இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, பெயர் பலகையை அப்புறப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அங்குள்ள சாலையில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சாந்தலிங்கம் மற்றும் கிராமிய காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே சாலையோரம் இருந்த பெயர் பலகை இருந்த இடத்தில் இருந்து மீன் இறைச்சி கடை நடத்த வசதியாக பெயர் பலகையை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்திருந்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர், பெயர் பலகையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட வந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x