Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

ஜெயலலிதா பல்கலை.யில் பணியிடங்களை நிரப்பக் கோரி - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு : அதிமுக ஆட்சியில் பணிகள் நடக்கவில்லை என பொன்முடி விளக்கம்

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த 2020 செப்.16 அன்று புதிதாக சட்டம் இயற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்திலேயே ஊழியர்கள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்புவெளியிட்டது சட்டவிரோதம்.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இயங்கும்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்புபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. எனவே, டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் சுமுகமான முறையில் இயங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யஉயர்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பாக விழுப்புரத்தில் எந்த பணியையும் அதிமுக அரசு செய்யவில்லை. பெயர் அளவில் மட்டும்தான் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கான நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

அதேபோல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரி பல்கலையைத் தன்னாட்சி அங்கீகாரத்தில் இருந்து இணைப்புஅங்கீகாரமாகப் பெறும் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்றுஅரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகமும் கடுமையான நிதி சுமையில் உள்ளது. எனவே, அதை இணைப்பு அங்கீகாரம் பெற்று பல்கலைக்கழகமாக மாற்றஅரசு முடிவு செய்துள்ளது. அதன்கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் கல்லூரிகளை இணைக்க உள்ளோம்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு ஒரு சிறிய பணியைக்கூட கடந்த அரசு செய்யவில்லை. இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு இந்த விளக்கத்தைத்தான் தெரிவிக்கும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x