Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

ரூ.76.80 கோடி மதிப்பில் - காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணி மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆய்வு :

காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணியினை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே காலிங்கராயன்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து, கொடுமுடி ஆவுடையார்பாறை வரை 56 மைல் தூரத்திற்கு, காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ளது. நதிகள் இணைப்பிற்கு முன்னோடியாய் காலிங்கராயனால் கிபி 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இந்த கால்வாய் மூலம் 15 ஆயிரத்து 734 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

கால்வாயில் வெண்டிபாளையம் முதல் ஆவுடையார் பாறை வரை 40 மைல் தூரம் உள்ள வாய்க்காலில் 21 பாலம், 513 மதகுகள், 25 குமுழி பாலம், 2485 மீட்டர் நீளம் தடுப்பு சுவர், 1210 மீட்டர் கிளை வாய்க்கால் உள்ளிட்ட பணிகளை சீர் அமைப்பதற்காக நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கியது. ரூ.76.80 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

காலிங்கராயன் கால்வாய் சீரமைப்புப் பணிகளை மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சி.சரஸ்வதி நேற்று பார்வையிட்டார். சின்னியம்பாளையம் அருகே உள்ள பாலம் கட்டும் பணி, பாசூர் மாரியம்மன் கோயில் அருகில் கட்டப்பட்டு வரும் பாலம் மற்றும் கருமாண்டம்பாளையம், ஆவுடையார் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.சிவசுப்பிரமணி, பாஜக மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x