Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

கரோனா அதிகரிக்கும் நிலையில் பக்ரீத்துக்காக - ஊரடங்கில் தளர்வு அளித்தது ஏன்? : கேரள அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

பக்ரீத்துக்காக ஊரடங்கில் தளர்வுஅளித்தது ஏன் என்பது குறித்து பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சிறிய மாநிலமான கேரளாவில் நாள்தோறும் சராசரியாக 10,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கும் அமல் செய்யப் படுகிறது.

இந்த சூழலில் நாளை கொண்டாடப்பட உள்ள பக்ரீத் பண்டிகைக்காக ஜூலை 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை துணி, நகைக்கடை உட்பட அனைத்து கடைகளையும் திறக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறையாத நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. டெல்லியை சேர்ந்த பி.கே.டி. நம்பியார் என்பவரும் இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், பி.ஆர்.கவாய்அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பி.கே.டி.நம்பியார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதிடும்போது, ‘‘ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்களின் உயிரோடு கேரள அரசு விளையாடுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

இன்று விசாரணை

இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, "பக்ரீத்துக்காக ஊரடங்கில் தளர்வு அளித்தது ஏன் குறித்து கேரள அரசு திங்கள்கிழமை மாலைக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை முதல் வழக்காக இதுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x