Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

தென்காசி, புதுச்சேரி நிரவி தொகுதிகளின் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தென்காசி மற்றும் புதுச்சேரி நிரவி திருமலைராயன்பட்டினம் தொகுதி எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதை எதிர்த்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டம் நிரவி திருமலைராயன்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாக தியாகராஜன், தன்னை எதிர்த்துப் போட்டியி்ட்ட பாஜக வேட்பாளர் வி.எம்.சி.எஸ். மனோகரனை விட 5511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து மனோகரன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி வி.பாரதிதாசன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதி, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மற்றும் நிரவி திருமலைராயன்பட்டினம் எம்எல்ஏ நாக தியாகராஜன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆக.21-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x