Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களில் - துறை சார் பேராசிரியர்களை துணைவேந்தராக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களில் துறை சார்ந்த பேராசிரியர்களை மட்டும் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கு தொழில்நுட்பப் பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.தொடர்புடைய பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது கற்பித்தலைக் கடந்து ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் சார்ந்த ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவை கலை,அறிவியல் வகைப் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்களில் கலை அல்லது அறிவியல் படிப்பில் வல்லமை வாய்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால் மட்டும்தான், அவர்களால் அந்தப் பல்கலைக்கழகம் சார்ந்த பாடத்திட்டங்களை மேம்படுத்த முடியும்.

ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கலை அறிவியல் படித்தவரையும், வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சட்டம் படித்தவரையும், சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இசை கற்றவரையும் எப்படி நியமிக்கமுடியாதோ, அதேபோல் கலை,அறிவியல் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாகவும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை படித்த பேராசிரி யர்களை நியமிக்க முடியாது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள் கலை - அறிவியல் பல்கலைக்கழகங்கள் ஆகும். அந்தப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், கலை மற்றும் அறிவியல் பேராசிரியர்களை மட்டும் அவற்றின் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசும் ஆளுநரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x