Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

ராயக்கோட்டையில் கனமழை - சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு :

ராயக்கோட்டையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

ராயக்கோட்டை புருஷப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தவமணி (45). இவரது மனைவி தெய்வானை. இவர்களுக்கு ஆறுமுகம், முருகன் என்ற இருமகன்களும், அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராயக் கோட்டை பகுதியில் பெய்த கனமழையின்போது, தவமணியின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தவமணி மீது சுவர் விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோ, தவமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு மூலம் நிவாரணம் வழங்கவும், வீட்டை கட்டிக்கொடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்வதாக” வட்டாட்சியர் உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x