Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு :

புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும்பள்ளியில் படித்த மாணவர்களுக் கான பிளஸ் 1 தரவரிசை பட்டியல் இன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, அந்த மாணவர்களுக்கு 21-ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.

புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4,045 இடங்கள், கலைப்பிரிவில் 2,305 இடங்கள், தொழில் பாடப்பிரிவில் 565 இடங்கள் என மொத்தம் 6,915 இடங்கள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவில்லை. இதனால் 9-ம் வகுப்பு மதிப்பெண்அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கைநடக்கிறது. 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 23-ம் தேதி அரசுப் பள்ளிகளில் விநியோகம் செய்யப் பட்டு கடந்த 5-ம் தேதி வரை பெறப்பட்டன. பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு 8 ஆயிரத்துக்கு மேற் பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான பிளஸ் 1 சேர்க்கை தரவரிசை பட்டியல் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 14, 15 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று (ஜூலை 19) வெளியிடப்படுகிறது. 21-ம் தேதி நிதியுதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கை நடக்கிறது. இதிலும் நிரம்பாத இடங்கள் குறித்த விவரம் மற்றும் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 22-ம் தேதி வெளியிடப்படும். 23-ம் தேதி தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x