Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி 20 உலகக் கோப்பை தொடரானது கரோனா பெருந்தொற்றால் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 17ம் தேதி 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அறிவித்தது.
இதன்படி சூப்பர் 12ல் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் குரூப் 2ல் இடம் பெற்றுள்ளன. இதே பிரிவில் நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் உள்ளன. இந்த 4 பிரதான அணிகளுடன் முதல் சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் இணையும். இதேபோன்று குரூப் 1ல் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவிலும் முதல் சுற்றில் வெற்றி பெறும் 2 அணிகள் இணையும். அணிகளின் தரவரிசையின் அடிப்படையில் குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
முதல் சுற்றில் இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்து கொள்ளும். டி 20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT