Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

ராஜேந்திர பாலாஜி மீதான - சொத்துக்குவிப்பு புகார் வழக்கில் ஆகஸ்ட் 5-ல் இறுதி விசாரணை :

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 4-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

சொத்து குவிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்துள்ளனர்.

இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நேரடி விசாரணையாக நடைபெறும் என தெரிவித்து வழக்கை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x