Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

பொதுத்துறை வங்கிகளில் - கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு : ஓபிசி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார்

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பதவிக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும், இந்திய வங்கி பணியாளர் தேர்வு மையம் அண்மையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், யூனியன் வங்கியின் காலி பணியிடங்கள் அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இந்த வங்கியில் மட்டும் நாடு முழுவதும் 2,200 கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், தமிழகத்தில் மட்டும் 147 காலி பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டின்படி, 40 இடங்கள் என்பதற்குப் பதிலாக பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ஜாதி ஏழை பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் கீழ், ஒதுக்கப்பட வேண்டிய காலி பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை. 320 காலி பணியிடங்கள் வேறு பிரிவினருக்கு செல்வதால், பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுகுறித்து, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x