Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM

நெல்லை, தென்காசி, குமரியில் மழை :

திருநெல்வேலி/ தென்காசி/நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 7 மி.மீ., சேர்வலாறு அணைப்பகுதியில் 1 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 114.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 718 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74.70 அடியாக இருந்தது. அணைக்கு 87 கனஅடி தண்ணீர் வந்தது. 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது. ஒருசில நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. பெரும்பாலான நாட்களில் வறண்ட வானிலை நிலவியது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும் பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 19 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 18.60 மி.மீ., கருப்பாநதி அணையில் 18, ஆய்க்குடியில் 16, குண்டாறு அணையில் 10, சிவகிரியில் 7 , செங்கோட்டை, சங்கரன்கோவிலில் தலா 6 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 69.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 62.67 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் இருந்தது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. கரோனா பரவலால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து வரும் நிலையில் அடையாமடையில் அதிகபட்சமாக 17 மி.மீ. மழை பதிவானது.

களியலில் 12 மிமீ., சிற்றாறு ஒன்றில் 9, குழித்துறையில் 7, பேச்சிப்பாறையில் 15, சுருளகோட்டில் 9, பாலமோரில் 12 மிமீ., மழை பதிவானது. தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 786 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 172 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. மாவட்டத்தில் நேற்றும் விட்டு விட்டு சாரல் பொழிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x