Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா 100-வது பிறந்த நாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணு, வைகோ நேரில் வாழ்த்து

மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர்.படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணு, வைகோ, கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவருமான என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள், சென்னைகுரோம்பேட்டையில் உள்ள அவரதுஇல்லத்தில் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்கரய்யாவுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் கே.பொன்முடி, தா.மோ. அன்பரசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் நேரில் வந்து சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சங்கரய்யா குறித்து சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சங்கரய்யாவின் வாழ்க்கை, கம்யூனிஸ்ட் இயக்கமாக இருந்தது. தற்போது வரைமக்களுக்காக இயங்கி வருகிறார்.அவருடைய தியாகம் பெரும் மதிப்புக்குரியது. ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடியவர். சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு பணி செய்தவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 100 ஆண்டு பயணத்தில் இவரின் பங்கேற்பு முக்கியமானது. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்” என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் சங்கரய்யாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகள்:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி - தீக்கதிர்ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காகசங்கநாதம் எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினராக, சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. தேர்தல் அரசியலில் திமுகவுடன் உடன்பட்டும் முரண்பட்டும் இருந்தாலும் கருணாநிதியின் பெருமதிப்பிற்குரிய தலைவராவார்.

சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு - தீண்டாமை ஒழிப்பு - மதநல்லிணக்கம் இவற்றுக்காக கருணாநிதியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாக அவர் நின்றதை மறக்கமுடியாது. வாழும் வரலாறாக 100-வது பிறந்தநாள் காணும் சங்கரய்யா, மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்ட வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு வயது என்பது ஓர் எண்தான். அது தோழர் சங்கரய்யாவுக்கும் பொருந்தும். அகவை நூறைஅவர் எட்டினாலும் அவரது மக்கள்நலப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இந்த வயதிலும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உட்பட பல தளங்களில்இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயணித்து, இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும்சங்கரய்யா, இன்னும் பல ஆண்டு கள் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x