Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

போலீஸாரை திமுகவினர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு - மணல் கடத்தலை தடுக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

தமிழகத்தில் மணல் கடத்தல், காவல் துறையினரை மிரட்டும் சம்பவங்கள் நடக்காமல்தடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எல்லா மட்டத்திலும் திமுகவினரின் தலையீடு தலைவிரித்தாடுகிறது. திருச்சி மணப்பாறை அருகில் முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீஸார் சென்று சோதனை நடத்தி, ஜேசிபி மற்றும் 2 டிப்பர் லாரிகளைபறிமுதல் செய்தனர். ஓட்டுநர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவை மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானவை என்று தெரியவந்தது.

இதேபோல, புதுக்கோட்டை காரையூர் அருகில் கீழ்த்தானியம் பகுதி கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மணல் கடத்திய லாரியை பிடிக்க முயற்சித்தபோது, அவர்களை லாரி ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிய நிலையில், லாரியில் இருந்து 3 பேர் இறங்கி வந்து அவர்களை தாக்கியுள்ளனர்.

இதுபோன்ற மணல் கடத்தல் சம்பவங்கள்ஆங்காங்கே நடந்து வருவதாக தகவல்கள்வருகின்றன. காவல் துறையினரை மிரட்டுவதும், வருவாய் துறை அதிகாரிகளை கொல்லமுயற்சிப்பதும் கண்டனத்துக்குரியது. இந்தநிலை நீடித்தால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்.

எனவே, இப்பிரச்சினையில் முதல்வர்உடனே தலையிட்டு, மணப்பாறை திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி மற்றும் புதுக்கோட்டையில் அதிகாரிகளை கொல்ல முயற்சித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துதண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகி நீக்கம்

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஆரோக்கியசாமி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x