Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM
கோவையில் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.2.85 கோடி பெற்று மோசடி செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை அவிநாசி சாலையில்உள்ள தனியார் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன், மாநகர குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரில்,‘‘புதுக்கோட்டை மாவட்டம் பேச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் (57) உள்ளிட்ட 4 பேர், மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக, கடன் பெற்று தருவதாக கூறி, என்னிடம் ரூ.2.85 கோடி தொகையை கமிஷனாக பெற்று மோசடி செய்துவிட்டனர்’’ எனக் கூறியிருந்தார்.
காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில்,மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தனிப்படை போலீஸார், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று, சென்னை அடையாறு மற்றும் ஆலங்குடியில் பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான எண்ணிக்கையில் கையொப்பமிட்ட, நிரப்பப்படாத முத்திரைத்தாள்கள், புரோ நோட்டுகள், காசோலைகள், பல்வேறு நபர்களுடன் செய்து கொண்டஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டுவந்த பன்னீர்செல்வம், அவருக்கு உடந்தையாக இருந்த செல்வக்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் கூறும்போது, ‘‘இவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்டதாக, ரூ.49.85 கோடி மற்றும் ரூ.49.95 கோடிக்கான இரண்டு போலி வரைவோலைகள் கைப்பற்றப்பட்டன. கடந்த 2010-ம்ஆண்டு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு தங்கம் தராமல் பன்னீர்செல்வம் ஏமாற்றியுள்ளார். பின்னர், ரூ.5 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்ததாக பன்னீர்செல்வம் மீது அங்குள்ள போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பன்னீர்செல்வம் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT