Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

கரோனா பாதிப்பு முழுமையாக குறையாததால் - புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

கரோனா பாதிப்பு முழுமை யாக குறையாததால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி கள் திறப்பு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

‘புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததால் ஜூலை 16 (இன்று) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த 11-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொண்டன. எனினும் கல்வித் துறை மூலம் பள்ளிகளுக்கு இதுதொடர்பான முறையான சுற்றறிக்கை எதுவும் அனுப்பி வைக்கப் படவில்லை.

இதற்கிடையே கரோனா தொற்று முழுமையாக குறையாததால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு சென்ற கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆளு நர் தமிழிசையை சந்தித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று முழுமையாக குறையாத நிலை உள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வரிடமும், என்னிடமும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

முதல்வருடன் ஆலோசனை

இதுதொடர்பாக கல்வித்துறை செயலர்,இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வரை சந்தித்து கலந்தாலோசித்தோம். தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து பள்ளி, கல்லூரியைத் திறப்பது தொடர்பாக பேசினேன். தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரி திறப்பதை சற்று தள்ளி வைப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது.

கரோனாசூழ்நிலை மற்றும் பக்கத்து மாநிலங்களின் சூழ்நிலைகளை ஆராய்ந்து ஏதுவான சூழல் உருவாகும் நேரத்தில் மீண்டும் ஆளுநர், முதல்வரிடம் கலந்தாலோசித்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தேதியை அறிவிப்போம்.

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின்கீழ் இயங்கும் ஒரு அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டு தலின்படிதான் நமது அரசாங்கத்தை நடத்த முடியும். சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசு சரிசெய்யும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x