Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

மாநில பிரிவினை சட்டத்தை மீறுகிறது தெலங்கானா : உச்சநீதி மன்றத்தில் ஆந்திர அரசு வழக்கு

ஆந்திரா – தெலங்கானா இடையே கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில பிரிவினை சட்டத்தை தெலங்கானா அரசு மீறுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு நேற்று வழக்கு தொடர்ந்தது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிந்தாலும் இரு மாநிலங்களுக்கிடையே நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் இவ்விரு மாநிலங்கள் வழியாக பாயும் கிருஷ்ணா நதி நீர் தொடர்பான பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கிருஷ்ணா நதியில் உள்ள நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு வரும் தண்ணீரில் மேல்நோக்கிய பாசனம் மூலம் தெலங்கானா அரசு மின்சாரம் தயாரிக்கிறது. தண்ணீர் குறைவாக உள்ள காலத்திலும் மின்சார உற்பத்தி நடக்கிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சோமசீலா அணை மற்றும் ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து குறைவதால் ஆந்திராவில் ராயலசீமா விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போதிய நீர்வரத்து இல்லாதபோது மின்சார உற்பத்தியை நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசு பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் தெலங்கானா அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு நேற்று மனு தாக்கல் செய்தது. அதில் மாநிலப் பிரிவினை சட்டத்தை மீறி தெலங்கானா அரசு செயல்படுவதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x