Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

கல்லூரி மாணவர்களுக்கு அதிமுக அரசில் வழங்கப்பட்ட - ‘டேட்டா கார்டு’களை புதுப்பித்து தர பழனிசாமி வேண்டுகோள் :

கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக அதிமுகஅரசால் வழங்கப்பட்ட ‘டேட்டா கார்டு’களை புதுப்பித்து தரவேண்டும் என்றுதமிழக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயர்கல்வியில் திமுக ஆட்சியில் 2010-11 ஆண்டில் 32.9 சதவீதமாக இருந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், தற்போது 51.40 சதவீதமாக உயர்ந்து, நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இதற்கு அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியே காரணம்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை நடத்தமுடியாத சூழலில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள் நடத்தின.இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக மாணவர்கள், ஆண்ட்ராய்டு கைபேசி அல்லது அரசு வழங்கிய மடிக்கணினி வைத்திருந்தாலும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அதற்குரியதரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வாங்க இயலாத நிலையில் இருந்தனர். எனவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படித்த 9.70 லட்சம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரிமுதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் கூடிய தரவு அட்டைகளை வழங்க அதிமுக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச ‘டேட்டா கார்டு’ வழங்கப்பட்டு அவர்களும் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்றனர். கரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததால், இந்த ஆண்டும் ஆன்லைன் வழியாகத்தான் கல்வி கற்க வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

எனவே, கல்வி நிறுவனங்கள் தற்போது செயல்படாவிட்டாலும், மாணவர்களில் சிலர் இந்த ஆண்டுக்கான பாடங்களை இணையவழி, இணையவழி நூலகம், கூகுள் போன்ற முறைகளில் தரவிறக்கம் செய்து பயின்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை மற்றும் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களால் மாதம் ரூ.200 முதல் 400 வரை செலவழித்து, ‘டேட்டா கார்டு’களை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது எனவே, ஏற்கெனவே அதிமுக அரசால் வழங்கப்பட்ட ‘டேட்டா கார்டு’களை புதுப்பிப்பதோடு, இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கும் ‘டேட்டா கார்டு’ வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x