Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

திருச்சி

புதுச்சேரி மாநிலத்தைப்போல தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் ஜூலை 16-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அவரது உத்தரவின்படி பள்ளிகள் திறக்கப்படும்.

நடப்பு ஆண்டில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து இதுவரை 3.40 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும் வகையில், அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 சதவீதமாக உள்ள பள்ளி இடைநிற்றலை 5 சதவீதமாக குறைப்பதுதான் தமிழக அரசின் இலக்கு. பள்ளி இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2013, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பலர் வேலைக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ஏற்கெனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்தும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x