Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஊராட்சியில் தலைவராக வெற்றிச்செல்வி மற்றும் துணைத் தலைவர், 12 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பட்டீஸ்வரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் 11 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட புகார் மனுவை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளது: பட்டீஸ்வரம் ஊராட்சி உறுப்பினர் கூட்டம் கடந்த 7 மாதங்களாக நடைபெறவில்லை. கரோனா காலத்தில் ஊராட்சி சார்பில் எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்டால், அதை தலைவர் வெற்றிச்செல்வி பொருட்படுத்துவது இல்லை. வரவு- செலவு கணக்குகளை மற்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. ஊராட்சியின் 31 பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. ஊராட்சியால் முறையான ஏலமுறை பின்பற்றப்பட வில்லை. 100 நாள் வேலைத் திட்டம் குறித்து கேட்டாலும், உரிய பதில் அளிப்பது இல்லை. வாகன நிறுத்துமிடம், தரைக்கடை ஏலம் முறையாக நடைபெறவில்லை. இதனால், ஊராட்சிக்கு பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தலைவர் மற்றும் உறுப்பினர்களால் கொண்டுவரக்கூடிய தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஊராட்சி நிர்வாகம் நடைபெற வேண்டும் என்ற பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படை விதிகளை மதிக்காமல், தன்னிச்சையைாக செயல்படும் பட்டீஸ்வரம் ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT