Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - நாடு முழுவதும் செப்.12-ம் தேதி நீட் தேர்வு : மத்திய அமைச்சர் ட்விட்டரில் தகவல்

சென்னை

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

இந்த படிப்புகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என என்டிஏ அறிவித்திருந்தது. கரோனா தொற்று காரணமாக தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வை நடத்துவது குறித்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர், மருத்துவக் கல்வி நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மாலை (இன்று) 5 மணி https://nta.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 198 நகரங்களில் 3,862 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் வழக்கமான காகிதம், பேனா கொண்டு எழுதும் முறையில் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.8 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதினர்.

மாணவர்கள் தயாராக வேண்டும்

இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் நீட் தேர்வு அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, “நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு, ஜூலை 13-ம் தேதி (இன்று) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்பின், மாநில அரசு முடிவெடுக்கும். தமிழக அரசை பொறுத்தவரை, நீட் தேர்வு வேண்டாம் என்பதே நிலைப்பாடு. தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். ஒருவேளை, நீட் தேர்வு எழுத வேண்டும் என வந்து விட்டால் மாணவர்கள் பாதித்துவிடக் கூடாது. எனவே, மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராக வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x