Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

பத்திரப்பதிவுத் துறையை சீரமைக்க நடவடிக்கை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

கோவை

பத்திரப்பதிவுத் துறையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பத்திரப்பதிவுத் துறையை சீரமைக்கும் வகையில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகளை மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து அதிகாரிகளையும் சோதனை பணிக்கான கள ஆய்விலும் ஈடுபடுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ​

காலை 11 மணி , 12 மணிக்கு பணிக்கு வந்துகொண்டிருந்த அதிகாரிகள், எங்களின் நடவடிக்கையால் தற்போது சரியான நேரத்துக்கு பணிக்கு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தவறு செய்த அதிகாரிகள் பணியிடை நீக்கமும், சிலர்பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த போலி பத்திரப்பதிவுகள் போல இல்லாமல், அனைத்தையும் சரியான முறையில் பதிவு செய்ய இந்த அரசு முனைப்பாக உள்ளது. புது வணிகர்கள் எளிமையாக பதிவு செய்யும் வகையில், ஆன்லைனில் தமிழ் மொழியிலேயே பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள் விரைவாக நடைமுறைப் படுத்தப்படும். சிறு, குறு, நடுத்தரதொழில் முனைவோரின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். பெட்ரோல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசும், முதல்வரும் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கோவையில் வணிகர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, “நேர்மையாக வணிகம் செய்பவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். போலியாகவும், விலைப்பட்டியல் இல்லாமலும் வியாபாரம் செய்பவர்களை கண்டறிந்து, அதை சரி செய்வோம். அனைத்து உதவிகளையும் அரசு கட்டாயம் செய்யும். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கும், ஒழுங்கு படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், எம்.பிக்கள் பி.ஆர்.நடராஜன்,கு.சண்முகசுந்தரம், கணேசமூர்த்தி,வணிகவரித் துறையின் முதன்மைசெயலர் எம்.ஏ.சித்திக், வணிக வரித்துறை அரசு செயலர் ஜோதிநிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் வணிக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x