Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் வெளியீடு : மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கை நாளை (ஜூலை 14) தொடங்குகிறது. ஒரே கட்-ஆப் மதிப்பெண் இருந்தாலும் வழிகாட்டு வழிமுறைப்படி அந்தந்த பள்ளி முதல்வர்கள் சேர்க்கையில் முடிவு எடுப்பர்.

புதுவை அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4 ஆயிரத்து 45, கலைப்பிரிவில் 2 ஆயிரத்து 305 இடங்கள் உள்ளன. தொழில்பாடப்பிரிவில் 565 இடங்கள் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 915 இடங் கள் உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவில்லை. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்1 சேர்க்கை நடக்க உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 23-ம் தேதி அரசு பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கட்நத 5-ம் தேதி வரை பெறப்பட்டன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

கரோனா கால ஊரடங்கால் பலரும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதும் விண்ணப்பம் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை தரவரிசை பட்டியல்அந்தந்த பள்ளிகளில் நேற்று மாலைவெளியிடப்பட்டது. நாளை மாணவர்சேர்க்கை தொடங்குகிறது. 10-ம் வகுப்புக்கு தேர்வு நடத்தாததால் பலமாணவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் ணுடன் விண்ணப்பித்துள்ளனர்.

பல மாணவர்கள் 5 பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று 500க்கு 175 பெற்றுள்ளனர். சில பள்ளிகளில் 200 மாணவர்கள் வரை இந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். சம மதிப்பெண்களுடன் உள்ளதால் எந்த அடிப்படையில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி அரசு பள்ளிகள் தரப்பில் விசாரித்தபோது, "ஏற்கெனவே ஒரே கட் ஆப் இருந்தால் பிறந்த தேதி தொடங்கி சேர்க்கைக்கு பல வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதன்படி பள்ளி முதல்வர் சேர்க்கையை நடத்துவார்" என்று குறிப்பிட்டனர்.

அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை முடிந்து 19-ம் தேதி காலியிட விவரம் வெளியிடப்படும். அன்றே அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகிறது.

இவர்களுக்கு 21-ம் தேதி சேர்க்கை நடைபெறும். 22-ம் தேதி காலியிட விவரம் வெளியிடப்பட்டு, அன்றைய தினம் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 23-ம் தேதி சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x