Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாடு சேவை வழக்குகளை தாக்கல் செய்யலாம் : மாவட்ட நீதிபதி ரஜினி அறிவிப்பு

மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுப் பயன்பாடு சேவை தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் என நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரஜினி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.கே.கே.ரஜினி விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நீதிபதியைத் தலைவராகக் கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் அனைத்து நீதிமன்ற வேலை நாட்களில் செயல்படும். மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுப் பயன்பாடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரசத் தீர்வு செய்து கொடுக்கப்படும்.

நீர்வழி, ஆகாயவழி, தரை வழி பயணிகள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், மின் விநியோகம், துப்புரவு, மருத்துவமனை, மருத்துவத் துறை தொடர்பான பிரச்சினைகள், காப்பீடு, வீடு, வீட்டுமனை சேவைக் குறைபாடுகள் தொடர்பான புகார்களை சாதாரண காகிதத்தில் குறிப்பிட்டு மனுவாகத் தாக்கல் செய்யலாம்.

இதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வழக்கின் முடிவு உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சமமானது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத நிலையில் நிரந்தர மக்கள் நீதிமன்ற ஆணையத்தால் சட்டத்துக்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீர்வு செய்து கொடுக்கப்படும். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவே இறுதியானது. ஏழை மக்கள் விரைவில் நீதி பெற முடியும். மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை 04652- 2535067, 9442138881, 9488370694 என்ற எண்களில் அணுகலாம்.

இவ்வாறு மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x