Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் ரூ.4.96 கோடியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வைகை ஆறு விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை 55 கி.மீ. சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கான 100-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
ஆனால் தட்டாண்குளம், ஆதனூர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இடைக்காட்டூர் தடுப்பணை கட்டிய சில மாதங்களிலேயே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. போதிய தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீர் தேங்காமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கானூர், கீழப்பசலை அருகே தடுப்பணைகள் கட்ட கோரிக்கை எழுந்தது. மேலும் கானூர் அருகே ரூ.31.5 கோடியிலும், கீழப்பசலை அருகே 4.96 கோடியிலும் தடுப்பணை கட்ட கருத்துரு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கீழப்பசலை அருகே ரூ.4.96 கோடியில் தடுப்பணை கட்ட அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.
தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிந்ததும் பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT