Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

வருசநாடு அருகே செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் உயிரிழப்பு :

வருசநாடு

வருசநாடு அருகே தர்மராஜபுரம் மலைப்பகுதியில் செந்நாய் கடித்து 15 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம்(37). இவர் 25-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். அருகில் உள்ள மலைப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். வழக்கம்போல நேற்று மலைப்பகுதியில் வெள்ளாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதிய வேளையில் சாப்பிட வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது செந்நாய் கூட்டம் வெள்ளாடுகளை துரத்திக் கடித்துள்ளன. உயிர் பயத்தில் ஆடுகள் கிராமத்துக்கும், மலைப்பகுதியிலும் சிதறி ஓடின. செந்நாய் தாக்குவதை அறிந்த சிதம்பரம், அருகில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். அதற்குள் செந்நாய் கூட்டம் 15 ஆடுகளைக் கடித்துக் கொன்றது.

இதுகுறித்து வனச்சரகர் ஆறுமுகம் ஆடுகள் இறந்து கிடந்த பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினார். பின்னர் இவர் கூறுகையில், செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேட்டையாடும். ஆட்டின் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி விடும். ஆடுகள் தனியாக இருந்ததால் வேட்டையாடி உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x