Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

உலக மக்கள் தொகை தின விழா :

திருச்சி

உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் ‘தன்னம்பிக்கையும், தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழ்நிலையிலும் குடும்ப நலத் திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்வோம்’ என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் அரசு அலுவலர்கள் உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, செவிலிய மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்த எ.சியமான்ஜினி, பி.பூவிலா, ஆர்.கனகவல்லி, அருள்கவி, சி.பொன்னுபாப்பா, எம்.ஷாலினி ஆகியோருக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு ரதத்தை தொடங்கிவைத்தார்.

உலக மக்கள் தொகை நாளையொட்டி ஜூலை 24-ம் தேதி தகுதியுள்ள தம்பதியினருக்கு சிறப்பு குடும்பநல அறுவைச் சிகிச்சைகள், தற்காலிக குடும்பநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் சு.சிவராசு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் பிரியா தேன்மொழி (குடும்ப நலம்), சாந்தி (தொழுநோய்) மற்றும் மருத்துவ, சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் உறுதிமொழி வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன்கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், குடும்ப நல துணை இயக்குநர் ராஜ்மோகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில்...

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஆட்சியர்  வெங்கட பிரியா, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் தலைமையில் அரசு மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (குடும்ப நலம்) ஆ.ராஜ்மோகன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் என்.ராஜா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x