Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

கத்திக்குத்து காயங்களுடன் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சரக்கு வேன் ஓட்டுநர் : உறவினர்களிடம் போலீஸார் விசாரணை

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே சரக்கு வேன் ஓட்டுநர் கத்திக்குத்து காயங்களுடன் வீட்டுக்குள் சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக, அவரது உறவினர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு(70). இவருக்கு 5 மகன்கள், ஒரு மகள். இவர்கள் அனைவரும் அருகருகேயுள்ள குடிசைகளில் வசிக்கின்றனர். பாலுவின் மூத்த மகன் சஞ்சய் காந்தி(35), சரக்கு வேன் ஓட்டுநர். திருமணமாகாத இவர், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சஞ்சய் காந்தி, தனக்கு ஏன் திருமணம் செய்துவைக்கவில்லை எனக்கூறி, குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில், அன்று இரவு மீண்டும் வந்து தகராறு செய்துவிட்டு, வீட்டுக்குள் சென்று தூங்கினார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டுக்குள் கத்திக்குத்து காயங்களுடன் சஞ்சய் காந்தி சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸார் அங்கு சென்று, சஞ்சய் காந்தியின் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சஞ்சய் காந்தியின் சகோதரர்கள் புயலரசன், தினேஷ் ஆகியோர் தலைமறைவாகி உள்ளதால், அவரை உறவினர்களே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பாலு உள்ளிட்ட சஞ்சய்காந்தியின் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x