Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
திருச்சி/ தஞ்சாவூர்: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஞா.அறச்செல்வனிடம், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் கா.மோகன்குமார் உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மோகன்குமார் கூறும்போது, “தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு தனியார் பள்ளிகள் நிர்பந்தப்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கரோனா காலக் கட்டத்தில் நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்துக்காக கடுமையாக போராடி வருகின்றனர். இந்தநிலையில், கல்விக்காக அதிக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். எனவே, இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்கள் கண்காணித்து, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில், துணைத் தலைவர் பிரபாகரன், மாநகரத் தலைவர் சிரில் இமான், மாநகரக் குழு உறுப்பினர் அர்ஜூன் உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT