Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி. வேளாண் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்பாக, உழவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். தமிழக அரசின் நிதி நிலைமை ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால், தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். எனவே, வரி வருவாயை பெருக்கும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழக அரசின் நிதியில் 40 சதவீத வருவாய் கலால் வரி மூலம் கிடைக்கிறது. எனவே, வரி வருவாயை பெருக்கினால் மட்டுமே, சமூக நல திட்டங்களை செயல்படுத்துதல், வேளாண் தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியும்” என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒரு மண் சட்டியில் பெட்ரோல் மற்றும் மதுபானத்தை ஊற்றி, அதிலிருந்து ரூ.4 ஆயிரம் கிடைப்பது போல் செய்து காண்பித்து முழக்கமிட்டனர். இதில், மாவட்டச் செயலாளர் சிவா, துணைத் தலைவர் பாண்டித்துரை, மணி, ஒன்றிய நிர்வாகிகள் சின்னபையன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT