Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM
நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்பவர்களை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிவேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம என 3 பிரிவுகளில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இது நாட்டின் உயரியவிருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,மருத்துவம், சமூக சேவை, அறிவியல்,வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுக்கு தகுதியானவர்களை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பரிந்துரை செய்வது வழக்கம். இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை நியமிக்கும். அக்குழு பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும். பின்னர் ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.
இதன்படி 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் நடைமுறைகள் கடந்த மாதம் தொடங்கின. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை இணையதளம் வாயிலாக வரும் செப்டம்பர் 15-ம்தேதிக்குள் பரிந்துரை செய்யலாம் எனமத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பல திறமையான மனிதர்கள் உள்ளனர். அவர்கள் அடிமட்ட அளவில் மிகச்சிறப்பாக சேவை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களை நாம் பார்த்திருக்க மாட்டோம் அல்லது அவர்களைப் பற்றிகேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபோன்ற மனிதர்கள் யாரேனும் உங்களுக்கு தெரியுமா? அவர்களை பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யுங்கள். வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உங்கள் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பலாம்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT