Published : 12 Jul 2021 03:13 AM
Last Updated : 12 Jul 2021 03:13 AM

எம்பிசி-க்கான 20% ஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது : அரசுக்கு மிகவும் பிற்பட்டோர் 115 சாதிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எம்பிசி-க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது என்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 115 சாதிகள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தி உள்ளது.

இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் ராஜன், தவமணி தேவி, ராமச்சந்திரன், பழனிச்சாமி, ரஜினி, முனியசாமி உள்ளிட்டோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

10.5 ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் எம்பிசி, டிஎன்டி பிரிவில் உள்ள 115 சமூகங்களின் 20 சதவீத இடஒதுக்கீடு உரிமையைப் பறித்து, ஒரு சாதிக்கு மட்டும் அதிமுக அரசு விதிமீறல்களுடன் 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அறிஞர் குழு மூலம் ஆய்வு செய்து, எல்லா சமூகங்களுக்கும் இட ஓதுக்கீடு கிடைக்க வகுப்புவாரித் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும். அதுவரை எம்பிசிக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தில் அரசு மாற்றம் செய்யக்கூடாது. இது தொடர்பாக முதல்வரிடம் முறையிட உள்ளோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழகத்தில் மக்கள் தொகை, உள்ஒதுக்கீடு குறித்து எந்த ஆணையமும் பரிந்துரை வழங்கவில்லை. அம்பாசங்கர் ஆணையத்தின் 21 உறுப்பினர்களில் 14 பேர் புள்ளி விவரங்களை அரசு ஏற்கக் கூடாது எனப் பரிந்துரைத்துள்ளனர். உள்ஒதுக்கீடு முறையால், வறிய சமூகங்களின் சமூக நீதி பாதிக்கப்படும்.

நீதிமன்றங்களில் இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றப் பணி நியமனத்தில், அச்சட்டத்தைச் செயல்படுத்த முடியாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நிலையை அரசின் மற்ற துறைகளும் எடுக்க முடியும். 115 சமூகங்களை ஆலோசிக்காமல் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. விரைவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சீர்மரபினர் அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x