Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

42,766 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95,716 ஆக உயர்ந்துள்ளது. தினசரி புதிய பாதிப்பு கடந்த சில நாட்களில் லேசான சரிவைக் கண்ட பிறகு மீண்டும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 6-ம் தேதி புதிய நோயாளிகள் எண்ணிக்கை 34,703 ஆக இருந்தது. கடந்த 111 நாட்களில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 738 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து கேரளாவிலும் (130), கர்நாடகாவிலும் (68) உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு நாட்டின் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 7,145 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,254 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 92.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது 4 லட்சத்து 55,033 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது, மொத்த நோய்த் தொற்றில் 1.48 சதவீதம் மட்டுமே ஆகும்.

நாட்டில் இதுவரை 42.90 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 37.21 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 30 லட்சத்து 55,802 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x