Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

மத்திய அமைச்சர்களில் 42% பேர் மீது குற்ற வழக்கு; 90% பேர் கோடீஸ்வரர்கள் :

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை, கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்போது உள்ள அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களில் இடம்பெற்றுள் தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

மொத்தம் உள்ள 78 அமைச்சர்களில் 42 சதவீதம் பேர் (33) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 31% பேர் (24) மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுபோல மத்திய அமைச்சர்களில் சுமார் 90 சதவீதம் பேருக்கு (70) ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இதில் ஜோதிராதித்ய சிந்தியா ரூ.379 கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். பியூஷ் கோயல் (ரூ.95 கோடி), நாராயண் ரானே (ரூ.87 கோடி), ராஜீவ் சந்திரசேகர் (ரூ.64 கோடி) ஆகியோருக்கு ரூ.50 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் (ரூ.5 லட்சம்), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜான் பர்லா (ரூ.14 லட்சம்), ராஜஸ்தானின் கைலாஷ் சவுத்ரி (ரூ.24 லட்சம்), ஒடிசாவின் விஷ்வேஸ்வர் துடு (ரூ.27 லட்சம்) மற்றும் மகாராஷ்டிராவின் வி.முரளிதரன் (ரூ.27 லட்சம்) ஆகியோர் குறைவான சொத்து வைத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x