Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM

‘பொதுமக்களுக்கான சாலை' போட்டியில் சிறந்த வடிவமைப்புக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் :

‘பொதுமக்களுக்கான சாலை' என்ற தலைப்பில் சாலைகளை புதுமையாக வடிவமைக்கும் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளது: சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கான சாலைகளை புதுமையாக வடிவமைத்து தரும் அறிவுத்திறன் போட்டிக்கு, திருச்சி மாநகரம் உட்பட நாடு முழுவதும் 113 மாநகரங்களை மத்திய அரசின் நகர்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டிக்கு திருச்சி மாநகரில் கரூர் புறவழி இணைப்புச் சாலை (தில்லைநகர் சாஸ்திரி சாலை போக்குவரத்து சிக்னல் முதல் கலைஞர் அறிவாலயம் வரை) மற்றும் லாசன்ஸ் சாலை (அண்ணா நகர் இணைப்புச் சாலை சந்திப்பு முதல் மத்திய பேருந்து நிலையம் வரை) மற்றும் பாரதிதாசன் சாலை (மாவட்ட நீதிமன்றம் முதல் கன்டோன்மென்ட் ஒத்தக்கடை போக்குவரத்து சிக்னல் வரை) ஆகிய சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சாலைகளை வடிவமைக்க வேண்டும். சாலைகளை புதுமையாக வடிவமைத்துத் தருவோருக்கு (ஒவ்வொரு சாலைக்கும் தனித்தனியாக) முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.75,000, 3-வது பரிசாக ரூ.50,000 வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க (https://smartnet.niua.org/indiastreetchallenge/cities/tiruchirappalli/) என்ற வலைதள முகவரிக்குச் சென்று ஜூலை 12-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x