Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM
திருப்பதி: கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான பாடகியாக பணியாற்றியவர். இவரின் சுப்ரபாத குரலே இன்று வரை ஏழுமலையானை துயில் எழுப்பி வருகிறது. ஏழுமலையானின் தீவிர பக்தரான எம்.எஸ்., தான் வாழும் வரை பல காணிக்கைகளை சுவாமிக்கு செலுத்தியுள்ளார். அவர் இறந்த பிறகும், சுப்ரபாத பாடலால் வரும் ராயல்டி தொகை காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அவருக்கு கடந்த 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அவரை கவுரவிக்கும் வகையில் திருப்பதி பஸ் நிலையம் அருகில் கடந்த 2006-ல் தம்புராவுடன் கூடிய வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. திருப்பதி பஸ் நிலையம் அருகில் தற்போது ‘கருட வாரதி’ என்ற பெயரில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, எம்.எஸ்., தெலுங்கு தாய் மற்றும் பூரண கும்ப சிலைகள் கடந்த திங்கட்கிழமை இரவு அகற்றப்பட்டன. ஆனால் இச்சிலைகள் அருகில் சிறுநீர் கழிப்பிடம் அருகில் வைக்கப்பட்டதை கண்டு எஸ்.எஸ்.சின் தீவிர ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
“அப்பா திறந்து வைத்தார். மகன் (ஜெகன்மோகன் ரெட்டி) இடித்து வைத்தார்” என்பது போன்ற மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவின.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவீன் குமார் ரெட்டி, இந்த சிலைகளை வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி மாநகராட்சி ஆணையர் கிரிஷாவிடம் முறையிட்டார். இதையடுத்து திருப்பதி பிரகாசம் மாநகராட்சி பூங்காவில் இந்த சிலைகள் நேற்று வைக்கப்பட்டன. பாலம் கட்டப்பட்ட பிறகு, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலை மீண்டும் பஸ் நிலையம் அருகில் நிறுவப்பட வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT